Sunday, 18 September 2016

யாதும் . .

 யாதும்  ஊரே யாவரும் கேளீர்,   

" யாதும் ஊரே யாவரும் கேளீர்
  தீதும் நன்றும் பிறர் தர வாரா
  நோதலும் தணிதலும் அவற்றோரன்ன
  சாதலும் புதுவதன்றே வாழ்தல்
  இனிது என மகிழ்ந்தன்றும் இலமே
  முனிவின் இன்னாதென்றலும் இலமே 
  மின்னொடு வானம் தண்டுளி தலைஇ 
   ஆனது கல்பொருது மிரங்குமல்லல் 
   பேரியாற்று நீர்வ்ழிப்படும் புணைபோல் 
    ஆருயிர் முறைவழிப்படும் என்பது திறவோர் 
    காட்சியில் தெளிந்தனம் ஆதலின் 
     மாட்சியிற்ப் பெரியோரை வியத்தல் இலமே 
     சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே"
                                                                .-- கணியன் பூங்குன்றனார்

விளக்கம்;- மின்னொடு வானம் தண்டுளி; மின்னலோடு (இடியும்) கூடிச் சிறுதுளிகளாகப் பெய்யும் மழைவெள்ளமானது, 
தலைஇ ஆனது ; சிற்றோடைகளாக தொடங்கி பல சிற்றோடைகள் இணைந்து, 
கல்பொருது இரங்கும் அல்லல்பேரியாற்று ; கற்களை உருட்டி மோதி ஓசை உண்டாகும் அளவுக்கு பேராறாக மாறி செல்லும் போது, 
நீர்வழிப்படும் புணை போல் ;அந்த பேராற்று நீரோட்டத்தில் வழியே இழுபட்டுச் செல்லும் படகைப் போல், 
ஆருயிர் முறைவழிப்படும் என்பது,;உயிர் வாழ்க்கை சமுக-சூழல் இயக்க முறைக்கேற்பவே அமையும் என்பதை, 
திறவோர் காட்சியிற் தெளிந்தனம் ;கற்றுணர்ந்த சான்றோர் இயற்றிக் தந்துள்ள(காட்டியுள்ள) நூல்களின் வழியாக தெளிவடைந்ததால், 
தீதும் நன்றும் பிறர் தர வாரா ; தீமையோ, நன்மையோ மற்றவர்களால் ஏற்படுவதல்ல- தாமே வருபவை, 
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன ; துன்பம் இன்பம் இரண்டும் கூட அவ்வாறுதான் அமையும், சாதலும் புதுவதன்றே ; இறப்பும் இயல்பான ஒன்றுதான்- புதுமையானதல்ல, 
வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே ; வாழ்க்கை இன்பமானதென   மகிழ்ச்சிப்பெருக்கடைவதும் இல்லை, 
முனிவின் இன்னாதென்றலும் இலமே ; வாழ்வில் வெறுப்படைந்து துன்பமானது எனக் கொள்வதுமில்லை, 
ஆகலின் ; ஆகையால்
மாட்சியிற்ப் பெரியோரை வியத்தலும் இலமே ; செல்வாக்குள்ள பெரிய மனிதரை பார்த்து புகழ்தலும்(வியப்படைதலும்) இல்லை. 
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே ;அவ்வாறில்லாத சிறியோரை இகழ்வது ஒருபோதும் இல்லை(கூடாது)
யாதும் ஊரே யாவரும் கேளீர் ; உலகில் எல்லா ஊரும் சொந்த ஊர் போல்தான், யாவரும் உறவினர் போல்தான், (கருதுகிறோம்)
 **- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -- - - - - - - - - - - - - - - - -- - - - - - - -**
சிறு துளிகளாகப் பெய்யும் மழைநீர் ஒன்று சேர்ந்து சிற்றோடைகளாகி, சிற்றோடைகள் பேராறாக மாறுகின்றன. பேராறு ஆர்ப்பரித்துப் பாயும் போது பெருங்கற்களையும் உருட்டிச் செல்லும் அளவுக்கு வேகமுறும் நீரோட்டத்தில் இழுபட்டுச் செல்லும் படகைப் போலவே மனித வாழ்க்கையும், காலவெள்ளத்தில் இழுபட்டுச் செல்லும் என்பதைக் கற்றுணர்ந்தோர் வெளிப்படுத்தியுள்ளனர். ஆகவே இன்ப-துன்பங்களில் துள்ளலோ-துவள்தலோ, சிறப்படைந்த பெரியோரை வியந்து புகழ்தலும் இல்லை. அதைவிடவும் சிறியோரை இகழ்வது இல்லவே இல்லை.
    "எல்லா ஊரும் ஒன்றே,எல்லாவிடத்து மக்களும் உறவினரே".








No comments:

Post a Comment